Pages

Saturday, November 6, 2010

பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடிய கிராமத்து மக்கள்
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2010,00:26 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=120918

சென்னிமலை: சென்னிமலை அருகே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.தீபாவளி என்றால் பட்டாசும், புத்தாடையும் தான்; ஆனால், சென்னிமலை அடுத்துள்ள வடமுகம் வெள்ளோடு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வி. மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரைவழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி ஆகிய கிராமங்களில் வெடி என்பது அறவே கிடையாது. இதை கேட்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். சென்ற 11 ஆண்டுக்கும் மேலாக தீபாவளியை இந்த பகுதி கிராம மக்கள் இப்படிதான் கொண்டாடுகின்றனர். இதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள பறவைகள் சரணாலயமே.வெள்ளோடு மேட்டுப்பாளையம் பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு பறவைகள் தங்கி உள்ளது. அவ்வப்போது வெளி நாட்டு பறவைகளும் வந்து செல்கிறது. அமைதியை தேடி வரும் பறவைகளுக்கு வெடி தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக பறவைகள் சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடி வெடிப்பதை மக்கள் தியாகம் செய்துள்ளனர்.தீபாவளிக்கு மட்டுமின்றி இப்பகுதியில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு கூட வெடி வெடிப்பது கிடையாது. பறவைகளுக்காக வெடியை தியாகம் செய்துள்ள இந்த பகுதி மக்களை பாராட்டாமல் இருக்க முடியாது. சிறுவர்கள் மகிழ்ச்சிக்காக கம்பி மத்தாப்பூ, தரைசக்கரம்,  புஸ்வாணம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்தனர்.