Pages

Saturday, June 16, 2012

குரங்குகளிடம் குறும்பு செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=488147
பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012,01:54 IST

குன்னூர்:"குன்னூர்-பர்லியாறு சாலையில், குரங்குகளுக்கு தீங்கு ஏற்படுத்தினால், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்' என, வனத்துறை எச்சரித்துள்ளது.
வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதி குன்னூர்-பர்லியாறு மலைப்பாதை. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதியில் செல்வதால், வனவிலங்குகள் அவ்வப்போது சாலையை கடக்கின்றன. சாலையில், குரங்குகள் கூட்டம் அதிகமாக உள்ளதால், இவற்றை காணும் சுற்றுலாப் பயணிகள் பலர், அவற்றுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, குன்னூர்-பர்லியாறு சாலையில் இருபக்கமும் உள்ள வனப்பகுதிகளில், தங்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்களை எடுப்பதுடன், உட்கொள்ளும் பொருட்களின் மீதியை வீசி விட்டு செல்கின்றனர். தவிர, கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களையும் விட்டுச் செல்வதால், இவற்றை ருசி பார்க்கும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால், குன்னூர்-பர்லியாறு சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள், குரங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். அறிவிப்பு பலகையிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வன விலங்குகளுக்கு தீங்கு விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் வனத்துறை, சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இதுவரை குரங்குகளுக்கு உணவளிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.a

Thursday, June 14, 2012

பெரிய யானையின் உயிரையே உலுக்கும் சிறு புழுக்கள்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=485870
பதிவு செய்த நாள் : ஜூன் 13,2012,22:49 IST

ஈரோடு: ஈரோட்டில் குடற்புழுக்கள் நோயால் இறக்கும் யானைகள் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. யானையின் இனம் காக்க, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு டிவிஷனில் பர்கூர், காங்கேயம், அந்தியூர், எப்.எஸ்., பெருந்துறை, சென்னம்பட்டியிலும், சத்தியமங்கலம் டிவிஷனில் பவானிசாகர், ஹாசனூர், தாளவாடி, டி.என்.பாளையம் ஆகிய பகுதிகளிலும், காப்புக் காடுகள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில், 2,276 சதுர கி.மீ., பரப்பளவில், 27.72 சதவீதம், வனப்பகுதி உள்ளது. மாநிலத்திலேயே, அதிக வனப் பரப்பு மற்றும் வன விலங்குகளை கொண்ட மாவட்டமாக, ஈரோடு மாவட்டம் திகழ்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள, 3,867 யானைகளில், 1,200க்கும் மேற்பட்ட யானைகள், ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் தான் உலா வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், நூற்றுக் கணக்கான யானைகளை, ஈரோடு மாவட்ட வனப்பகுதி இழந்துள்ளது. இதில், குடற்புழுக்களால் இறந்த யானைகளின் எண்ணிக்கையே அதிகம். உரிய மருத்துவப் பரிசோதனை இல்லாமல், வனத்துக்குள் கால்நடை மேய்ப்பதால் பரவும் ஒட்டுண்ணியால், ஈரோடு வனப்பகுதியில், யானை இனமே முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மண்டல வனப் பாதுகாவலர் அருண் கூறியதாவது: கால்நடைகளை உரிய மருத்துவ பரிசோதனை செய்யாமல், வனத்துக்குள் மேய விடுவதால், கால்நடைகளின் சாணம் மூலம், பாரசைட் என்ற ஒட்டுண்ணி பரவுகிறது. இந்த ஒட்டுண்ணி, வன விலங்குகளின் உடலுக்குள் பரவி, அவற்றின் இறப்புக்கு காரணமாகிறது. சத்தியமங்கலம், மாக்காம்பாளையம் வனப் பகுதியில், சில தினத்துக்கு முன் இறந்த யானையின் உடலை, பிரேத பரிசோதனை செய்ததில், வயிற்றில் ஆயிரக்கணக்கான பாரசைட் புழுக்கள் இருந்தன. இந்த ஒட்டுண்ணி, யானையின் செரிமானத்தை குறைத்து, யானைக்கு, குடற்புண் ஏற்பட காரணமாகி உள்ளது. வனத் துறையினரின் வேண்டுகோளை ஏற்காமல், அத்துமீறி வனத்துக்குள் கால்நடையை மேய்ப்பதால், வன உயிர்கள் இறக்க நேர்கிறது. வனம் மற்றும் வன விலங்குகளைக் காக்க மக்களிடையே விழிப்புணர்வும், இரக்க குணமும் தேவை. இவ்வாறு அருண் கூறினார்.

Tuesday, June 12, 2012

மணல் கடத்தலுககு இடையூறாக இருந்த 15 நாய்கள் விஷம் வைத்து சாகடிப்பு


செவ்வாய்க்கிழமை, ஜூன் 12, 2012, 17:10 [IST]
http://tamil.oneindia.in/news/2012/06/12/tamilnadu-15-dogs-poisoned-death-155580.html

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்த இடையூறாக இருந்த 15 நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர்.

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீடு பகுதி ஆற்றில் இருந்து அதிக அளவில் மணல் கடத்தப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இரவோடு, இரவாக லாரி, டிராக்டரில் மணல் கடத்தப்படுகிறது. மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு அப்பகுதி நாய்கள் இடையூறாக இருந்துள்ளன.

இந்நிலையில் மணப்பாடு வீடு அருகே நாய்களுக்கு மர்ம நபர்கள் மாமிசத்தில் விஷம் தடவி கொடுத்துள்ளனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், ஜான்சன், செல்லதுரை வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் உள்பட 15 பேருக்கு சொந்தமான நாய்கள் செத்து மடிந்தன. மேலும் விஷம் தடவிய மாமிசத்தை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட காக்கைகளும் இறந்தன.

மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இரவு நேரங்களில் மணல் அள்ள வருபவர்களை பார்த்து நாய்கள் குறைப்பதால் அவர்கள் நாய்களை விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பிராணிகள் வதை தடுப்பு அமைப்பான புளூ கிராசிடம் அப்பகுதி மக்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Monday, June 11, 2012

தெருநாய்களுக்கு கு.க., தேவை


பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012,07:01 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=484322

ஈரோடு: ஈரோடு மாநகரப் பகுதியில் அனைத்து தெருநாய்களுக்கும் கருத்தடை ஆப்ரேஷன் செய்யும் பணி முழுவீச்சில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஈரோடு மாநகரப் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நாய் கடியால் குழந்தைகள் பாதிக்கப்படுவதுடன், பல்வேறு நோய்களுக்கும் காரணமாகி சுகாதார சீர்கேட்டையும் தெருநாய்கள் ஏற்படுத்துகிறது. மிருகவதை தடை சட்டத்தின்படி நாய்களை கொல்வது நிறுத்தப்பட்டது.நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க மாநகராட்சி நிர்வாகம், கருத்தடை ஆப்ரேஷன் செய்யும் திட்டத்தை கொண்டு வந்தது. 

இதற்காக தனியே மையம் ஏற்படுத்தப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆனால், மத்திய அரசின் நிதியுதவி தாமதம், டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணத்தினால், கருத்தடை ஆப்ரேஷன் பணிகள் முழுவீச்சில் நடக்கவில்லை. 2011-12ம் ஆண்டில் 275 நாய்களுக்கு கு.க., ஆப்ரேஷன் செய்யப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கணக்கு காட்டப்படுகிறது.உண்மையில் இன்னும் குறைவாகத்தான் கருத்தடை ஆப்ரேஷன் நடந்திருக்குமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், தெருக்களில் முன்பு இருந்ததை விட தற்போது அதிகளவில் நாய்கள் திரிவதை காண முடிகிறது. தெருநாய் தொல்லைக்கு முடிவு கட்ட கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதன்காரணமாக மீண்டும் மாநகரில் தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்ரேஷன் செய்யும் பணிகள் கடந்த மூன்றாம் தேதி முதல் துவங்கியது. நாளொன்றுக்கு 25 நாய்கள் வீதம் இலக்கு நிர்ணயித்து பிடித்து ஆப்ரேஷன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், பணிகள் இன்னும் முழு வீச்சில் நடக்கவில்லை. களத்தில் போதுமான பணியாளர்கள் இறங்கி நாய்களை பிடிப்பதில்லை.இதனால், நாள்தோறும் இலக்கை விட குறைவான நாய்களுக்கே ஆப்ரேஷன் செய்யப்படுகிறது. எனவே, வழக்கம் போல் பெயரளவுக்கு இந்த பணிகளை மேற்கொள்ளாமல், இம்முறை மாநகரிலுள்ள அனைத்து நாய்களையும் பிடித்து கருத்தடை ஆப்ரேஷன் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

முதுமலை முகாம் யானைகளின் எடை அதிகரிப்பு


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=484412
பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012,20:37 IST

கூடலூர்:முதுமலை புலிகள் காப்பக முகாமில் உள்ள, வளர்ப்பு யானைகளின் எடை, 100 முதல் 200 கிலோ வரை அதிகரித்துள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், மூன்று குட்டி யானைகள், இரண்டு "மக்னா' உள்ளிட்ட 25 யானைகள் உள்ளன. மூன்று மாதத்துக்கு ஒருமுறை, இவற்றின் எடை அளவிடப்படுகிறது. இதன் மூலம், யானைகளின் உடல்நிலை அறியப்பட்டு, அதற்கேற்ப உணவு முறையில் மாற்றம் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.முதுமலை முகாம் யானைகளுக்கு, கடந்த ஜனவரி மாதம், எடை பார்க்கப்பட்டது. தற்போது, முதுமலை அருகே உள்ள தொரப்பள்ளியில் உள்ள எடை மேடையில், வளர்ப்பு யானைகளின் எடை சோதனையிடும் பணி நடைபெற்றது. குட்டி யானை மசினி, இரண்டு மக்னா யானைகள், நான்கு பெண் யானைகள் உள்ளிட்ட 16 யானைகளின் எடை சோதனையிடப்பட்டன. இதில், யானைகளின் உடல் எடை, 100 முதல் 200 கிலோ வரை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

மரங்கள் வெட்டப்படுவதால் பறவைகள் மாயம்: "மொபைல்போன் டவர்'களில் தஞ்சம்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=483798
பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012,23:49 IST

கோவை : கோவையில் வெட்டி வீழ்த்தப்படும் மரங்களால், அதில் வாழ்ந்த வந்த பறவை இனங்கள், ஆபத்து நிறைந்த "மொபைல்போன் டவர்'களிலும், உயர் கோபுர மின்கம்பங்களிலும் தஞ்சம் அடைந்து வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், கோவையில் பறவைகளை காண்பது மிகவும் அரிதாக போய்விடும்.

அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, மருதமலை ரோடு என, கோவையின் அனைத்து முக்கிய பகுதிகளும் மரங்கள் இல்லாமல், கட்டடங்களாய் காட்சியளிக்கின்றன. நகர வீதிகளில் புற்றீசல் போல் ஓடும் வாகனங்கள், தொழிற்சாலை புகை உள்ளிட்டவற்றால் காற்றும் பெருமளவு மாசடைந்துள்ளது. நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழல் மாசு அதிகரித்திருப்பதோடு, காற்றை சுத்திகரிக்கும் செயலை செய்யும் மரங்களும், அவற்றை நம்பி வாழ்ந்த பறவைகளும் மறைந்து வருகின்றன. இயற்கை கழிவுகளை அகற்றும் செயலையும், மரங்களின் விதைகளை பல இடங்களுக்கு பரப்பும் பணிகளையும் செய்த பறவைகள், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

மரங்களிலுள்ள பூச்சிகளை உண்டு, பூச்சி இனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி வந்த, சிட்டு குருவி, தூக்கணாங் குருவி, கிளி, காடை, காகம் என நூற்றுக்கணக்கான சிறிய பறவை இனங்களை தற்போது காண அரிதாக போய்விட்டது. பறவைகளை பொறுத்தவரை, வசிக்க மரம் மற்றும் உணவு மட்டுமேதேவை. குருவி, காகம் உள்ளிட்ட சிறிய பறவைகளுக்கு சராசரி உயரமுள்ள மரங்களும், பருந்துகளுக்கு பல அடி உயரமுள்ள பனை மரமும் வேண்டும். கோவையில் பல இடங்களில் தற்போது மரங்களே இல்லாமல், வெறும் கட்டடங்கள் மட்டுமே உள்ளதால், பறவை இனங்கள் தங்க இடமில்லாமல் போய்விட்டது.

எஞ்சிய குறைந்தளவு பறவைகளும் ஆபத்தை உணராமல், "மொபைல்போன் டவர்'களிலும், உயர் கோபுர மின்கம்பங்களிலும் தஞ்சமடைய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

"ஓசை' அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறியதாவது:ஒரு மரத்தின் கிளை, உச்சி, தண்டு என அனைத்து பகுதிகளும் பலதரப்பட்ட பறவைகள் வாழ அடைக்கலமாக திகழ்கின்றன. சர்வதேச அளவில் 6,000 பறவை இனங்களும், குறிப்பாக இந்திய துணை கண்டத்தில் 1,250 பறவை இனங்களும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவை சந்தித்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. டோடோ, பனங்காடை, இருவரிக்காடை என 25க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவை சந்தித்துள்ளன. பறவை சப்தங்களுடன் வாழும் மனிதனின் மனநிலை அமைதியாக இருக்கும் என்றும், நகரத்தில் வாகன சப்தங்களுடன் வாழும் மனிதனின் மனநிலை அமைதியற்று இருக்கும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.அதிகளவு எண்ணிக்கையில் காணப்பட்ட காகம், பருந்து ஆகியவை மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே தற்போது தென்படுகின்றன. பறவைகள் தானே என்று மெத்தனமாக இருந்தால், பிற்காலத்தில் பாதிப்பு மனிதர்களுக்கு தான்.இவ்வாறு, காளிதாசன் கூறினார்.

Saturday, June 9, 2012

வால்பாறையில் சிறுத்தை மர்மச்சாவு : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=482519
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012,22:52 IST


வால்பாறை: வால்பாறை டவுன் பகுதியில் மர்மமான முறையில் இறந்த சிறுத்தையை, பிரேதப் பரிசோதனை செய்ய முடியாமல், வனத்துறையினர் தவித்தனர். கோவை மாவட்டம், வால்பாறை டவுன் சிறுவர் பூங்கா பகுதியைச் சேர்ந்தவர், பெரிய அக்கா. இவரது வீட்டின் பின்பக்கம் உள்ள சமையல் அறையில், இரண்டு வயது பெண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்ததை, இப்பகுதி மக்கள் நேற்று காலை பார்த்தனர். இத்தகவலை வனத்துறைக்கு தெரிவித்தனர். வால்பாறை வனத்துறையினர் இறந்த சிறுத்தையை மீட்டு, அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

சம்பவம் குறித்து, பொதுமக்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மர்மமான முறையில் இறந்த சிறுத்தையை பரிசோதிக்க, வனத்துறையின் கால்நடை மருத்துவர் இல்லை. எனவே, வேறு மாவட்டத்தில் பணிபுரியும் வனத்துறை கால்நடை மருத்துவர் வரும்வரை, பிரேதப் பரிசோதனைக்காக காத்திருந்தனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பலியான சிறுத்தை, செந்நாய் விரட்டியோ அல்லது உடல் நலக்குறைவாலோ இறந்திருக்கலாம். கால்நடை மருத்துவர் வர தாமதமாகும் என்பதால், சிறுத்தையின் உடலை ஐஸ் கட்டி வைத்து, பத்திரமாக பாதுகாத்து வருகிறோம். இறந்த சிறுத்தை பிரேதப் பரிசோதனைக்கு பின், எரியூட்டப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். வால்பாறையில் சமீப காலமாக, காட்டுப் புலி, யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான், சிங்கவால் குரங்கு போன்ற வனவிலங்குகள், மர்மமான முறையில் இறந்து வருவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sunday, June 3, 2012

Animal rights activists stress on need to set up more ABC centres


COIMBATORE, April 9, 2012
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3295307.ece

Even while welcoming the Coimbatore Corporation's move to build an animal shelter in Vellalore, animal rights activists' cautioned against relocating dogs from their localities and stressed the need to set up more Animal Birth Control (ABC) centres.

Corporation Commissioner T. K. Ponnusamy said that the project would be finalised by April 2012. Diseased and aggressive dogs would be removed from the streets and kept in the shelter to be built on a 5,000 sq. ft. area on the Corporation's land in Vellalore.

According to Corporation officials, diseased dogs, dogs in heat and females with young puppies turned aggressive and caused problem to the public would be caught and kept in the shelter to be set up at a cost of Rs. 25 lakh. Details like the number of dogs to be housed, provisions for food and facilities to take care of them were yet to be decided. The officials said that similar projects in Masanagudi and Tirupur were successful. Mini Vasudevan, managing trustee, Humane Animal Society, and Kalpana Vasudevan (Managing Trustee), People for Animals Unit II and member of AWBI, said that the best way to deal with stray dog menace was to strengthen the ABC programme. All stray dogs could not be captured and put in the shelter. Both the organisations said that they were willing to provide assistance to the Corporation in sheltering sick and problematic animals.

Mr. Ponnusamy said that the Corporation would look into the possibilities of working with NGOs in running the programme.

Proposal for a similar project in Chennai has been met with protests from Animal Welfare Board of India (AWBI) and Blue Cross. According to the organisations, relocating dogs from their natural habitat was against the Animal Birth Control (Dogs) Rules, 2001, under Prevention of Cruelty to Animals Act.The animal right activists pointed out that prescribed methods should be followed while capturing and sheltering dogs. Dogs were territorial animals and removing them form their localities created problem. According to the activists, more ABC centres were required to effectively reduce the stray dog population in the district. The Corporation had only one centre functioning in Seeranaickenpalaym. At least, each zone of the Corporation should have a centre. Panchayats also should have facilities to sterilise dogs.

“AWBI is always ready to provide funds for the local bodies to carry out ABC programme. But, local authorities did not take much interest in this,” said Ms. Kalpana. There was a misconception among people that removing stray dogs from the area would solve the problem. But, that would not help address the issue, said Ms. Mini Vasudevan. She added that unethical practices like illegal breeding by pet shop owners should be curbed.

எல்லையில் "பிளாஸ்டிக்' கழிவுகள்:வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=479604
பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012,03:21 IST

குன்னூர்:நீலகிரி வனங்களில் சுற்றுலா பயணிகள் வீசியெறிந்து செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை சமன்பாட்டை தக்க வைத்து கொள்ளவும், 18 மைக்ரானுக்கு குறைவான "பிளாஸ்டிக்' பொருட்களை பயன்படுத்த இங்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுத்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகளாலும், சில உள்ளூர் விற்பனையாளர்களாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சில இடங்களில் காணப்படுகின்றன.
இந்நிலையில், நீலகிரியில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிட்டு அழகிய நினைவுகளை கொண்டு செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும், வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் "பிளாஸ்டிக்' பொருட்களை மட்டும் இங்கு விட்டு செல்கின்றனர். 
இதில் குறிப்பாக, குன்னூர்-பர்லியாறு சாலையில் இரு பக்கமும் உள்ள வனப்பகுதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்களை எடுப்பதுடன், உணவு பொருட்களை அங்கு அமர்ந்து உண்கின்றனர். 

பின்பு, உணவு கழிவுகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் இப்பகுதியிலேயே வீசிவிட்டு செல்வதால், பிளாஸ்டிக் கழிவுகள் இப்பகுதியில் குவிந்து கிடக்கின்றன.
இதனால், வன விலங்குகளுக்கு தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் பர்லியாறு பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனால் இதற்கு எவ்வித பயனும் கிட்டியதாக தெரியவில்லை. வனத்துறையில் போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில், இத்தகைய குப்பைகளை அகற்ற முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. இதனால், சுற்றுச்சூழலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில் வனத்துறை ஊழியர்கள் சில இயற்கை ஆர்வலர்களின் ஒத்துழைப்போடு வனங்களில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுகின்றனர். குன்னூர் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகின்றன. இவற்றை உண்ணும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றினால் மட்டுமே விலங்குகளை காக்க முடியும்