Pages

Sunday, November 14, 2010

சிறுத்தையை கொன்ற 4 பேர் கைது

விஷம் வைத்து சிறுத்தையை கொன்று உடல் உறுப்பு விற்க முயன்ற 4 பேர் கைது

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010,18:36 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=126199

உடுமலை : அமராவதி வனச்சரகத்தில் சிறுத்தையை விஷம் வைத்து கொன்று, உறுப்புகளை விற்பனைக்காக கொண்டு சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.அமராவதி வனசரகத்திற்குட்பட்ட மஞ்சம்பட்டியில், வனவர் சங்கரநாராயணன் மற்றும் வனத்துறையினர் நேற்று  ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகமான முறையில் நடமாடிக் கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம், சிறுத்தையின் கால் நகங்கள், பற்கள் ஆகியவை இருந்தன. அவற்றை விற்பனைக்காக கொண்டு செல்வது தெரிய வந்தது. நான்கு பேரையும் கைது செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.விசாரணையில், மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துரைசாமி(57), மதியழகன்(25), மணிகண்டன்(27) ஆகிய அந்த மூவரும், மேலும் ஒருவருடன் சேர்ந்து அப்பகுதியில் நடமாடிய சிறுத்தையை கொன்று, அதன் உறுப்புகளை எடுத்தது தெரிய வந்தது.வனச்சரகர் விஜயகுமார் கூறுகையில், ""மஞ்சம்பட்டியில் வசிக்கும் செல்வத்தின் மாட்டை, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறுத்தை கொன்றுள்ளது. இதனால், சிறுத்தையை கொல்ல அப்பகுதியைச் சேர்ந்த நான்கு பேரும் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர். சிறுத்தை விட்டுச் சென்ற இறைச்சியில், "குருடான்' என்ற விஷ மருந்தை கலந்து வைத்துள்ளனர். இதை தின்ற சிறுத்தை இறந்தவுடன், வனப்பகுதியில் உடலை மறைத்து வைத்துள்ளனர்.""சிறுத்தை உடலில் இருந்து நகம் மற்றும் பற்களை எடுத்து விற்பனைக்காக பதுக்கியுள்ளனர். இறந்த சிறுத்தைக்கு இரண்டு வயதிருக்கும். இவர்களிடமிருந்து எட்டு சிறுத்தை நகங்கள், மூன்று பற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.