Pages

Friday, August 12, 2011

முட்டையிட்ட கட்டுச்சேவல்


பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011,23:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=293807

ஈரோடு:ஈரோட்டில், சண்டைக்காக வளர்க்கப்படும் கட்டுச்சேவல் ஒன்று, நேற்று முட்டையிட்ட அதிசயம் நிகழ்ந்தது.ஈரோடு, காவிரிக்கரையை சேர்ந்தவர் மணி. பத்தாண்டுகளாக, கட்டுச் சேவல்களை வளர்த்து, விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை, சேவல் ஒன்று இட்ட முட்டை, பழுப்பு நிறத்தில், பட்டன் காளான் போல இருந்தது.இதை கண்ட அவர், சேவல்களுக்குள் நடந்த சண்டையில், உடல் உறுப்பு ஏதும் அறுந்து விட்டதோ என, நண்பர்களை அழைத்து காண்பித்தார். முட்டையை அறுத்து பார்த்த போது, உள்ளே ஐந்து அடுக்குகளில் வெள்ளை கருவும், ஒரு மஞ்சள் கருவும் இருந்தது.
தகவலறிந்து, சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள், முட்டையிட்ட சேவலையும், முட்டையையும், அதிசயமாக பார்த்து சென்றனர்.ஈரோடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சிக்கழக டாக்டர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:உயிர்களில், ஆணிடம் எக்ஸ், ஒய் குரோமோசோம்களும், பெண்ணிடம் எக்ஸ், எக்ஸ் குரோசோம்களும் இருக்கும். ஆனால், இவ்வகை சேவல்களுக்கு எக்ஸ், எக்ஸ், ஒய் அல்லது எக்ஸ், ஒய், ஒய் குரோமோசோம்கள் இருக்கும்.இவை இரண்டும் கெட்டான் தன்மையுடன், கருப்பை மற்றும் விதைப்பை ஆகிய இரண்டும் கொண்டிருக்கும். எப்போதாவது அரிதாக முட்டையிடும்; கோழிகளுடன் இணையவும் செய்யும். இம்முட்டையை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

யானைகளை பாதுகாக்க உணவு வளையம் திட்டம்

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2011,01:20 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=291216


பழநி : யானைகள் பாதுகாப்பு திட்டத்தில், வனக்கோட்டம் வாரியாக 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவு வளையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் வனஎல்லை அருகேயுள்ள பகுதிகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. வன உயிரின நடமாட்ட பகுதிகளும், பட்டா நிலங்களாக மாறியுள்ளன. இதனால் உணவு, தண்ணீர் தேவைக்காக, வனஎல்லையை கடந்து யானைகள் நடமாடுவது அதிகரித்து வருகிறது. 

இதனால் விளைநிலங்கள் சேதமடைவதுடன், உயிர் பலியும் ஏற்படுகிறது. இது தவிர யானைகள் வேட்டையாடுதல், துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. இவற்றை தவிர்க்க, வனஎல்லையை விரிவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைகளின் நடமாட்ட பகுதிகளில், வெளிமண்டல பகுதியை 40 மீட்டராக இருந்ததை, 200 மீட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வன எல்லையை ஒட்டியுள்ள நிலங்கள் குறித்த விபரங்களை, வனத்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

யானைகள் பாதுகாப்பு திட்டத்தில், ஆண்டுதோறும் உணவு வளைய திட்டத்தை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: யானை பராமரிப்பில் உள்ள வனப்பகுதியில், கோட்டம் வாரியாக ஆண்டுதோறும் 125 ஏக்கர் பயன்படுத்தப்படவுள்ளது. இதில் யானைகளின் உணவு தேவைக்கான மூங்கில், விதவிதமான புல் வகைகள் வளர்க்கப்படும். குடிநீர் தேவைக்கு, அதிக பரப்பிலான பண்ணைக்குட்டையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இதற்காக ஏக்கருக்கு நான்கு லட்சம் ரூபாய் வீதம் செலவிட அரசு திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

Saturday, August 6, 2011

வெளிநாடுகளுக்கு ராஜபாளையம் நாய்கள் : போலிகளை தடுக்க தேவை நடவடிக்கை


பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2011,23:00 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=290056

ராஜபாளையம் : வெளிநாடுகளுக்கு ராஜபாளையம் நாய்கள் செல்லும் நிலையில் , நாய்குட்டிகள் உற்பத்தியில் போலிகள் புகுந்துள்ளதால் இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். உலகில் உள்ள 350 இன நாய்களில் இந்திய வகையில் 6 இனங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் ராஜபாளையம், சிப்பிபாறை, கன்னி, கோம்பை என நான்கு இனங்கள் தென்தமிழகத்தை சேர்ந்தவை. வீட்டு உணவை சாப்பிட்டு வளர்பவை. இதற்கு வெளிநாட்டு நாய்களை போன்று எஜமான் விசுவாசம், கீழ்படிதல், நுகர்வு தன்மை, சுறுசுறுப்பு உண்டு. வீட்டு காவலுக்கு ராஜபாளையம் நாய்கள், வேட்டைக்காக சிப்பிபாறை, கோம்பை, கன்னி வகை நாய்கள் பயன்படுகின்றன.

எந்த இனத்தை சேர்ந்தவை நாய்குட்டி என சான்று வழங்கும் உலகளாவிய அமைப்பான "கென்னல் கிளப்' ராஜபாளையத்திலும் செயல்படுகிறது. இங்கு தென் தமிழகத்தை சேர்ந்த நாய்களுடன் வெளிநாட்டு நாய் வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ராஜபாளையம் வகை நாய்கள், மக்களை கவர்ந்து உள்ளன. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாதம் 100 நாய்களுக்கு ஆர்டர் வருகின்றன . இங்குள்ள பண்ணை மூலம் மாதம் 20 முதல் 25 நாய்களே கொடுக்க முடிகிறது. இதன் குட்டிகள் 4000 ரூபாய் முதல் 8000 வரை விலை போகின்றன.

ராஜபாளையத்தில் "கென்னல் கிளப்' அங்கீகாரம் இல்லாத சில பண்ணைகளும் உள்ளன. இங்கு குடிசை தொழில் போல் நாய்குட்டி உற்பத்தியும் மாறி வருவதால் சிலர் லாப நோக்குடன் , தெருநாய்களை கலந்து, கலப்பின குட்டிகள் உருவாக்குகின்றனர். இந்த கலப்பின குட்டிகளோ பார்வை கோளாறு, காது கேட்கும் தன்மை குறைவு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. குட்டியாக இருக்கும்போது தெரியாத இந்த குறைகள், வளரும்போது தான் தெரிகிறது. இதில் ஏமாறும் பலரும் எங்கு புகார் செய்வது என தெரியாமல் உள்ளனர். ராஜபாளையம் வகை நாய்களுக்கு தேவை அதிகமாக இருப்பதால், இத்தொழிலை அரசு முறைப்படுத்தி, நாய் உற்பத்தியை பெருக்கலாம்.

ராஜபாளையம் கான்டம்

பிளேட் கென்னல் கிளப் நாய்பண்ணை உரிமையாளர் சுரேந்திரன்பாபு கூறியதாவது: ராஜபாளையம் வகை நாய்கள் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு மாறும் தன்மை கொண்டவை. இதற்கு எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு . ஜம்முவில் உள்ள பாராமுல்லா ராணுவ முகாம், அந்தமான் தீவிற்கு அனுப்பி உள்ளோம். வெளிநாட்டு மோகத்தால், நம்நாட்டு நாய்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது கேரளாவில் வீடு, எஸ்டேட்களுக்கு இங்கிருந்து குட்டிகள் செல்கின்றன. ஆந்திரா, கர்நாடகாவிற்கும் குட்டி செல்கின்றன. இத்தொழிலை அரசு முறைப்படுத்தி, வங்கி கடனுக்கு ஏற்பாடு செய்தால், வேலை இல்லா இளைஞர்கள் பலர் இத்தொழிலில் ஈடுபடுவர், என்றார்.

கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் முருகன் கூறுகையில், ""கென்னல் கிளப் ஆப் இந்தியா சான்றிதழ் தரும் நிறுவனத்தில் நாய்களை வாங்கலாம். மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் தான் அங்கீகாரம் பெறாதவர்கள், கலப்பின குட்டிகளை விற்கின்றனர். நாய்பண்ணை துவங்க விரும்புவர்கள், நாய் வாங்க நினைப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க தயாராக உள்ளோம்,'' என்றார். இவரை தொடர்பு கொள்ள 94440 42046.