Pages

Tuesday, October 5, 2010

48 கோடியில் பூங்காவுடன் இறைச்சிக் கூடம்

பதிவு செய்த நாள் 10/6/2010 12:28:49 AM
http://dinakaran.com/chennaidetail.aspx?id=17131&id1=9


சென்னை : பெரம்பூரில் ^48 கோடியில் அழகிய பூங்காவுடன் உருவாகும் நவீன இறைச்சிக் கூடம் டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


நவீன இறைச்சிக் கூடம் பெரம்பூரில் கட்டப்பட்டு வருகிறது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மேயர் கூறியதாவது:


துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 1996ம் ஆண்டு சென்னை மேயராக இருந்த போது இந்த இறைச்சிக் கூடத்தை பக்தா நிறுவனம் மூலம் கட்ட முடிவு செய்தார். பின்னர் வந்த ஆட்சியாளர்கள் இதை தடுத்து நிறுத்தினர்.
2006ம் ஆண்டுக்கு பிறகு இந்த நவீன இறைச்சிக் கூடத்திற்கான பணியை துணை முதல்வர் துவக்கி வைத்தார். புதுடெல்லியைச் சேர்ந்த ஆக்ரோ இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட் 2009 செப்டம்பரில் கட்டுமான பணியை தொடங்கியது. 1903ல் கட்டப்பட்ட பழமையான இந்த கூடத்தை மாற்றியமைத்து நவீன முறையில் ^48 கோடி செலவில் கட்டப்படுகிறது.

 இந்த வளாகம் 9.4 ஏக்கரில் உள்ளது. இதில் 4 ஏக்கரில் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. மீதியுள்ள நிலப் பரப்பில் அழகிய பூங்கா அமைக்கப்படும். 2.60 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையமும் அமைக்கப்படுகிறது.  இந்த கூடத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் இறைச்சிக்காக ஒரு மணிநேரத்திற்கு 250 ஆடுகள் வெட்ட திட்டமிடப்பட்டது.

வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று ஒரு மணி நேரத்திற்கு 500 ஆடுகள் வெட்ட வழி செய்யப்பட்டுள்ளது. 60 மாடுகள் தனியாக வெட்ட வசதிகள் செய்யப்படும்.  இது தவிர இறைச்சி உறுப்புகளை விற்பதற்காக சுமார் 30 வியாபாரிகளுக்கு சிறிய அளவில் வணிக வளாகம் கட்டப்படும். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். தற்பொழுது வேலை செய்யும் தொழிலாளர்களே இதிலும் பணிபுரிவார்கள்.

இந்த புதிய வளாகத்தில் பொதுக்கூடம், மழைநீர் வடிகால்வாய், பயோ பில்டர், குளிர்சாதன வசதிகள், பதப்படுத்தும் அறைகள், ஆடுகளை நவீனமுறையில் வெட்டுவதற்கான அறைகள், வாகனங்கள் நிறுத்த இடம் என பல்வேறு நவீன வசதிகளுடன் அழகிய பூங்காவுடன் இறைச்சிக் கூடம் உருவாகிவருகிறது. இது டிசம்பர் மாதம் திறக்கப்படும். இந்தியாவில் இது போன்ற நவீன வசதிகள் உள்ள இறைச்சிக் கூடம் வேறு எங்கும் இருக்காது. இவ்வாறு மேயர் கூறினார். இந்த ஆய்வின் போது வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., மண்டலக்குழுத் தலைவர் கன்னியப்பன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.