Pages

Sunday, October 24, 2010

குளத்தில் விழுந்த யானைக்குட்டி பலி

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010,23:29 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=113019



மூணாறு : ஏலத்தோட்டத்தினுள் உள்ள குளத்தில் தவறி விழுந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யானைக்குட்டியை, காப்பாற்ற முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தது. இடுக்கி மாவட்டம், சாந்தம்பாறை அருகே போத்தொட்டி பகுதியில், சாக்கோ என்பவருக்கு சொந்தமான ஏலத்தோட்டத்தினுள் உள்ள சிறிய குளத்தில், யானைக்குட்டி தவறி விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்ததை தொழிலாளர்கள் கண்டனர்.

தேவிகுளம் டி.எப்.ஓ., மகேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினரும், சாந்தம்பாறை எஸ்.ஐ., சாக்கோ தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். குளத்தில் அகலம் குறைந்து, நீர்மட்டம் கூடுதலாக காணப்பட்டதால், யானைக்குட்டியை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. அதன்பின், பொக்லைன் இயந்திரம் மூலம், குளத்தின் கரையை வெட்டி, யானையை உயிருடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், மீட்புப் பணியின் போது யானை பரிதாபமாக உயிரிழந்தது. அதன்பின்பு இரண்டு மணிநேரம் போராடி யானையின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை நடத்தி, தீ வைத்து எரிக்கப்பட்டது. யானை, எப்போது குளத்தில் தவறி விழுந்தது என்ற விவரம் சரிவர தெரியவில்லை.