Pages

Tuesday, January 10, 2012

ஊருக்கு பெருமை சேர்த்த ஜல்லிக்கட்டு காளைக்கு மணிமண்டபம்: மதுரையில் ஆச்சர்ய கிராமம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=381431
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2012,23:33 IST


மதுரை:வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற மதுரையில், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொருவரும் காளைகள் வளர்த்தாலும், ஜாதி பேதமின்றி அனைத்து மக்களும் சேர்ந்து ஜல்லிக்கட்டுக்காக காளைகள் வளர்க்கிறார்கள். அதுவும் ஊருக்கு பெருமை சேர்த்து மறைந்த காளைக்கு மணிமண்டபம் கட்டியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே.

அலங்காநல்லூரில் இருந்து பாலமேடு வழியாக 7 கி.மீ., தூரம் பயணித்தால் வரவேற்கிறது "பொந்துகம்பட்டி' கிராமம். இங்குள்ள முத்தாலம்மன் கோயிலுக்கு, ஊர் சார்பில் "கோயில் காளை' ஒன்று கம்பீரமாக வலம் வந்தது. திடீரென்று ஐந்தாண்டுகளுக்கு முன், இறந்துபோனது. ஊரே அழுதது. "எந்த ஜல்லிக்கட்டுக்கு போனாலும், பரிசு இல்லாமல் திரும்பி வராது. அப்படி நம்ம ஊருக்கு பெருமை சேர்த்த இந்த காளைக்கு, கோயிலுக்கு எதிரேயே நினைவுச் சின்னம் அமைக்கணும்,' என ஊர் மக்கள் கூடி முடிவெடுத்தனர்.சில லட்சம் ரூபாயில், அழகிய மணிமண்டபம் உருவானது. அதில் கம்பீரமாக காளை உட்கார்ந்து ஊரை காப்பது போல் சிலை வடிவமைக்கப்பட்டது. இன்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு நடக்கும் தினத்தன்று, இந்த கோயில் காளைக்கு விசேஷ பூஜைகள் உண்டு. இக்கோயிலுக்கு பல காளைகள் இரு(ற)ந்த போதும், இந்த காளைக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

கவுன்சிலர் பெரியசாமி கூறியதாவது : அது என்னமோ தெரியலைங்க. மத்த காளைகளைவிட, இந்த காளை எல்லாரையும் ஈர்த்துச்சு. மக்கள் அதுமேல அன்பு வச்சாங்க. காளையும் அவுங்க மேல பாசமா இருந்துச்சு. ஊரில ஒருத்தரைகூட இது குத்தலைனா பார்த்துக்கோங்க. அதேசமயம், ஜல்லிக்கட்டுனா போதும், சும்மா... நின்னு விளையாடி, பரிசுகளை அள்ளிகிட்டு வரும். ஒரு ஊரில காளை இருந்துச்சுனா, அந்த ஊருக்கே அது பெருமை. இது பாரம்பரியமாக நடந்துட்டு வருது. அதனாலதான், இப்ப கோயில் காளை ஒன்றை வளர்த்துட்டு வர்றோம். வர்ற ஜல்லிக்கட்டுல முதன்முறையா விளையாட போகுது. எங்க ஊருக்கு பெருமை சேர்க்கப்போகுது, என்றார்.